குமரியில் கடல் சீற்றம் :
வீடுகளில் வெள்ளம் புகுந்தது
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், கடற்கரை வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. விவேகானந்தர் பாறைக்கு படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில், ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, மே இறுதியிலேயே கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், கன்னியாகுமரி முதல், நீரோடி வரையிலான கடல் பகுதியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக, கடற்கரையை ஒட்டியுள்ள, 200க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. கடலோர தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தன. இந்த வீடுகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடலில் எழும் அலையின் வேகம் அதிகமாக உள்ளதால், விவேகானந்தர் பாறைக்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, இரண்டு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்தனர்.