Welcome PradhiKarthik: குருப்பெயர்ச்சி பலன்கள் : சிம்ம ராசி

Tuesday, May 28, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் : சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் : சிம்ம ராசி

சிம்மம்:


(மகம், பூரம், உத்திரம்-1ம் பாதம்) சூரியனைப் போல பிரகாசமாக காணப்படும் சிம்ம ராசி அன்பர்களே! குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்தார். 10-ம் இடத்தில் குரு பகவான் இருக்கும்போது பிற்போக்கான பலனைத்தான் நீங்கள் கண்டிருப்பீர்கள். நீங்கள் எடுத்த எந்த முயற்சியும் நிறைவேறாமல் போயிருக்கும். பல்வேறு தடங்கல்கள் வந்திருக்கும். இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும். செய்யும் தொழில் நஷ்டம் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்திருப்பர். இப்படிப்பட்ட கெடு பலன்களை தந்து கொண்டிருந்த குரு பகவான் இப்போது இடம்மாறி 11-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை. அவர் எண்ணற்ற பல நன்மைகளை தர காத்திருக்கிறார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். அதோடு குருவின் 7, 9-ம் இடத்துப்பார்வைகளும் சாதகமாக விழுகிறது. அதாவது 7-ம் இடத்துப்பார்வை 5-ம் இடமான தனுசுவில் விழுகிறது. இதன்மூலம் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். 9-ம் இடத்து பார்வை கும்பத்தில் விழுகிறது.

                                  இதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வைத் தருவார். முக்கிய கிரகமான சனிபகவான் 3-ம் இடமான துலாமில் இருக்கிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். சனிபகவானோடு இணைந்திருக்கும் ராகு கூடுதல் நன்மைகளைத் தருவார். காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். குருபகவான் மட்டுமின்றி சனிபகவான், ராகு ஆகியோரும் நன்மை தரும் இடத்தில் உள்ளனர். பெரும்பாலான முக்கிய கிரகங்கள் சாதகமாக அமைந்துள்ளதால் இது சிறப்பான காலம். உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும் என்றுகூட சொல்லலாம். இதை பயன்படுத்தி முன்னேறுவது உங்கள் கையில் உள்ளது. இதுவரை இருந்துவந்த மன உளைச்சல் மறைந்து உற்சாகம் பிறக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும். உங்கள் ஆற்றல் மேம்படும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தாரிடம் மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தம் நிலவும். கணவன்- மனைவி இடையே இருந்த பிணக்குகள் மறைந்து அன்பு மேம்படும். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அனுகூலம் ஆகும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் பெறலாம். விருந்து ,விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு-மனை வாங்குவர். அல்லது தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். வாகன சுகம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை வேலையில் இருந்து வந்த தடைகள், திருப்தியின்மை போன்றவை அடியோடு மறையும்.

                     வேலையில் புதிய தெளிவு பிறக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் வருமானம் அதிகரிக்கும். பகைவர்களாக இருந்தவர்கள் உங்களை உணர்ந்து உங்களிடம் சரண் அடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆற்றல் திறமை மேம்பட்டு இருக்கும். புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். அரசின் உதவி கிடைக்கும். வேலை இன்றி இருப்பர்கள் சுய தொழிலை ஆரம்பிக்கலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவை வரும். சமூக நல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். பொது மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பதவியை கிடைக்கப் பெறலாம். மாணவர்களுக்கு கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப்பெறுவீர்கள். படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். எந்த பயிர் செய்தாலும் நல்ல மகசூல் கிடைக்கும். சிலர் நவீன முறையில் விவசாயத்தை கையாண்டு கூடுதல் வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்க அனுகூலம் பிறக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். தீர்ப்புகள் சாதகமாக அமையும். கைதொழில் ஈடுபடுபவர்கள் மனமகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். அவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம்.

                             எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். வக்கீல் தொழில் சிறப்பாக நடக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். கணவரின் அன்பு இருக்கும். குடும்பத்தில் உன்னத நிலையை பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் வரலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பெண்கள் பெருமை காண்பர். புத்தாடை, அணிகலன்கள், ஆடம்பர பொருட்கள் அதிகமாக வாங்குவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.

பரிகாரம்:- கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் பத்திரகாளியம்மன் மற்றும் காளியை வழிபட்டு வாருங்கள். மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி வாருங்கள். இப்படி செய்தால் நற்பலன்கள் மேலும் அதிகரிக்கும். இடையூறுகள் மறையும். நவக்கிரகங்களில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சன்னியாசிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெற்றால் வளம் அதிகரிக்கும்.